டெல்லி கேதார்நாத் கோவில்: சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய உத்தரகாண்ட் பாஜக முதல்வர்-காங்கிரஸ் ஆவேசம்!
டேராடூன்: டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டது அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இமயமலை கேதார்நாத் கோவிலுக்கு போட்டியாக டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுகிற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் புஷ்கர்சிங் தாமி, சனாதன தர்மத்தையும் வேதங்களையும் இழிவுபடுத்திவிட்டதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை இந்துக்களின் முதன்மையான புனித தலங்களாகும். இந்துக்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்வதை பெரும்பேறாக கருதுகின்றனர்.

இமயமலையின் நடுவே இருக்கும் இந்த 4 புனித தலங்களும் கடுமையான பனி கொட்டும் காலங்களில் மூடப்பட்டு இருக்கும். அதாவது ஆண்டுக்கு 6 மாதங்கள் மூடப்பட்டும் 6 மாதங்கள் திறக்கப்பட்டும் இருக்கும். இமயமலைப் பகுதி என்பதால் அவ்வளவு எளிதாக இந்த 4 புனித தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தவும் முடியாது. பாதயாத்திரையாக, குதிரைகளிலும் சென்றுதான் இங்கு வழிபாடு நடத்தவும் முடியும்.
இந்த நிலையில்தான் டெல்லியில் புதியதாக கேதார்நாத் கோவில் கட்டப்பட இருக்கிறது. வடமேற்கு டெல்லியில் கட்டப்பட இருக்கிற இந்த கேதார்நாத் கோவில் அடிக்கல் நாட்டு விழா- பூமி பூஜையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார். டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இமயமலை கேதார்நாத் கோவில் முன்பாக ஒன்று திரண்ட அர்ச்சகர்கள், சாதுக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். ஜோதிர்மட சங்கராச்சாரியார் உள்ளிட்டோரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
மேலும் உத்தரகாண்ட் இமயமலை கேதார்நாத் கோவிலில் இருந்த 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாகவும் இதை மறைக்கவே டெல்லி கேதார்நாத் கோவில் கட்டப்படுவதாகவும் ஜோதிர்மட சங்கரச்சாரியார் குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது உத்தரகாண்ட் மாநில அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் கரிமா மேஹ்ரா மற்றும் ஷீஸ்பால் பிஸ்த் ஆகியோர் இது தொடர்பாக கூறியதாவது: வேதங்களில் 4 சங்கராச்சாரியார்கள்தான் உள்ளனர். ஆனால் பாஜகதான் ஏராளமான புதிய சங்கரச்சாரியார்களை உருவாக்கியது. பாஜக கோவில் கட்ட வேண்டுமானால் குஜராத்தின் அக்ஷர்தாம் போல கட்டிக் கொள்ளலாமே.. கேதார்நாத் போல ஏன் கட்ட வேண்டும்? கேதார்நாத் கோவிலுக்கு என தனி சரித்திரம் உண்டு. கேதார்நாத் கோவில் தொடர்பாக இந்துக்களிடையே நம்பிக்கைகள் இருக்கின்றன. சனாதன தர்மத்தையும் வேதங்களையும் இழிவுபடுத்துகிற வகையில் கேதார்நாத் கோவில் டெல்லியில் கட்டப்படுகிறது. இதில் பாஜக அரசின் முதல்வர் புஷ்கர்சிங் தாமி பங்கேற்றது கண்டனத்துக்குரியது. இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications