பலாத்கார சம்பவம்.... டெல்லி போலீசுக்கு கேஜ்ரிவால் வார்னிங்
டெல்லி: டெல்லியில் நடைபெறும் பலாத்கார சம்பவங்களை தடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவரை 8 பேர் கும்பல் ஒன்று நகரின் மையப்பகுதியிலேயே கடத்தி சென்று பலாத்காரம் செய்தது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க, மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து ஏராளமான பேர், நகரின் மைய பகுதியிலேயே ஒரு சிலர் போதை பொருள் விற்கின்றனர் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்று புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி நேற்று நள்ளிரவு அதிரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டார்.
மக்கள் புகார் தெரிவித்த இடங்களில் விபசாரத் தடுப்பு பிரிவு போலீசார் எவ்வாறு பணிபுரிகின்றனர் என்பதை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை சோம்நாத் கண்டித்தார்.
பின்னர் இது குறித்து சோம்நாத் பார்தி கூறுகையில், போலீசார் நான் சொல்வதையும் கவனிப்பதில்லை. பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். டெல்லி போலீசார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அமைச்சர்களை கண்டுகொள்வதில்லை என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி போலீசாரை எச்சரித்திருக்கிறார். டெல்லி போலீசார் மெத்தனமாக இருக்கின்றனர் என்றும் பலாத்கார சம்பவத்துக்கு பொறுப்பான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.