டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி!
டெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தற்கொலை படை தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
காஷ்மீர் மாநிலம் அமைதியாக இருந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் உள்ள ராஜ்பாக் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். போலீசாரும், மத்திய ஆயுதப்படை போலீசாரும் திருப்பி தாக்கினர். இரு தரப்பினர் இடையே பல மணிநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய ஆயுதப்படை போலீசார் 2 பேரும், ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தனர். இந்த ராஜ்பாக் போலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதல் சம்பவம் நடந்து முடிந்து 24 மணி நேரம் ஆவதற்குள், காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் ராணுவ ஜீப்பை சோதனையிடுவது போல் கடத்திச் சென்று ராஜ்பாக் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக உளவுத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின்போது, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதிகள் இதேபோன்ற டெல்லி நகரை குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் டெல்லி போலீசாருக்கு ஒரு அறிவுரை குறிப்பை அனுப்பி உள்ளனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்ட தீட்டி இருப்பதாக தெரியவந்து இருக்கிறது.
அண்மையில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போல் இது அமையலாம். எனவே டெல்லியில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடாமல் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications