டெல்லியில் கடும் புழுதிப் புயல்: 9 பேர் பலி-13 பேர் காயம்
டெல்லி: டெல்லியில் வீசிய கடும் புயலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். மின்கம்பிகள் அறுந்து விட்டதால், நகரே இருளில் மூழ்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் பகல் நேரத்தில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டியெடுத்தது. இந்த நிலையில், "மாலையில் வானிலை மாற்றம் ஏற்பட்டது. மாலை 5 மணியளவில், வானில் கருமேகங்கள் திரண்டு டெல்லி மாநகரம் முழுவதும் இருள் சூழ்ந்தது.
இடி மின்னலுடன் புழுதிக்காற்று வீசியதால், பல வீடுகளில் கூரைகள் பெயர்ந்து விழுந்தன. வீடுகளின் சுவர்களும், மரங்களும் சாய்ந்தன. அவற்றின் இடிபாடுகளுக்குள் சிக்கி டெல்லியில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். புறநகர்ப் பகுதிகளில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் இருள் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. மணிக்கு 114 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசியதால், ஒரு சில பகுதிகளில் மரங்களும் சாலையோர அலங்கார தூண்களும் முறிந்து விழுந்தன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 12 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. டெல்லி மட்டுமின்றி புறநகர் பகுதிகளான நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களிலும் இந்த புழுதிப்புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்னும் 2 நாட்களுக்கு இதேபோன்ற வானிலை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.