டெல்லி இஸ்லாமியர்கள் மீதான வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை: மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா: டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 46 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் இப்படுகொலை சம்பவங்கள், நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
மேலும் கொல்கத்தாவில் நேற்று சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்ட திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி விரைவில் அமையும். ஆகையால் மமதா பானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியதாவது:
டெல்லியில் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த இனப்படுகொலைக்காக பாஜக இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்கத்தைக் கைப்பற்றுவோம் என்று வெட்கமே இல்லாமல் பேசி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் நடத்திய பேரணியில் பங்கேற்ற பாஜகவின் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என கோஷம் எழுப்பியுள்ளனர். இப்படியான கோஷம் எழுப்பியவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, முழக்கங்களை எழுப்பிய பாஜக தலைவர்கள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை? இவ்வாறு மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.