என்ன ஒரு சாதனை, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மத்திய அரசை விமர்சித்த ப.சி.
டெல்லி: 1 சதவீத பழைய ரூபாய் நோட்டுகளே ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளில் 1 சதவீதம் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கியின் 2016-17-க்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரான ப. சிதம்பரம் கூறியிருப்பதாவது,
சாதனையா?
1 சதவீத பழைய ரூபாய் நோட்டுகளே ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையோ?
தோல்வி
இதற்கு தான் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதா? இந்த நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி வாங்கிவிட்டது.
பிரதமர்
இந்த செயலுக்காக பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பண மதிப்பு நடவடிக்கையின் பின்னால் இருந்த பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவுக்கு தகுதி உள்ளது.
செலவு
பழைய நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்ததால் ரூ. 16 ஆயிரம் கோடி லாபமாம். ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளனர் என்றார் ப. சிதம்பரம்.