பணப்பரிமாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல்.. ராகுல் குற்றச்சாட்டு !
500, 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மும்பை: பிரதமர் மோடி அரசின் பணப்பரிமாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவித்ததில் இருந்து மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சில்லறைத் தட்டுப்பாடு, பழைய நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்சனை என நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக மக்கள் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை சாமானியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மும்பையில் இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் மத்திய அரசின் முடிவினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் சாமானிய மக்கள் பாதிக்கப்பட வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் பணப்பரிமாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது எனவும் ராகுல் குற்றம் சாட்டினார். ஊழல் உள்ளதால்தான் இத்திட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.
கருப்புப் பணத்தை மீட்பதற்கான திட்டம் இதுவல்ல. வங்கிகளில் இப்போது வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்திருப்பவர்களா? விவசாயிகளும், அரசு ஊழியர்களும், சாமானியர்களும்தான் வரிசையில் நிற்கின்றனர். இத்திட்டத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications