திருப்பதி லட்டுவில் திரிசூல வடிவில் இரும்புக்கம்பு… பக்தர்கள் அதிர்ச்சி
திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் இரும்பு கம்பி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாச ஆச்சாரிலு என்பவர் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. தனியாக கட்டணம் செலுத்தியும் பலரும் லட்டுவை வாங்கிச்செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் லட்டுவை புனிதமாக கருதி மற்றவர்களுக்கும் தருகின்றனர்.
ஏழுமலையான் கோவில் லட்டு தயாரிக்கும் பிரிவில் தினமும் லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக தனி இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவை தரமான முறையில் தயார் செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி வருகின்றனர். ஏழுமலையான தரிசிக்க எப்படி வரிசை நிற்கின்றனரோ அதோ போல லட்டு பிரசாதம் வாங்கவும் வரிசையில் காத்திருந்துதான் வாங்கவேண்டும்.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக 6 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பக்தர் சீனிவாச ஆச்சார்யலு என்ற பக்தர் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அவர் லட்டு பிரசாதத்தை வாங்கினார். அதில் ஒரு லட்டில் 3 இரும்புக்கம்பிகள் இருந்தன. திரிசூல வடிவில் நீட்டிக்கொண்டிருந்த அந்த இரும்புக்கம்பியைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையிட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை என ஸ்ரீனிவாச ஆச்சாரிலு குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் தேவஸ்தான அதிகாரிகளை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே லட்டு பிரசாதத்தில் இரும்பு ராடு, கீ செயின் வளையம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.