கலாம் மறைவிலும் காசு பார்க்கிறதா பிளிப்கார்ட்? விங்ஸ் ஆப் பையர் புத்தக விலை திடீர் உயர்வு
டெல்லி: அப்துல் கலாம் மறைவையடுத்து அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனம் அதிக கட்டணத்திற்கு விற்பனை செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவயடுத்து அவரது வாழ்க்கை வரலாற்று நூலான அக்னி சிறகுகள் மற்றும் அதன் ஆங்கில பதிப்பான Wings of Fire ஆகிய நூல்களுக்கு வாசகர்கள் மத்தியில் கிராக்கி ஏறியுள்ளது. அந்த நூலை படித்து கலாம் பற்றி அறிய பலரும் விரும்புகின்றனர்.
இதை சாதகமாக்கிக் கொண்டு ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் புத்தகத்தின் விலையை மடமடவென ரூ.40 அளவுக்கு உயர்த்திவிட்டதாக வாசகர்கள் டிவிட்டரில் ஆதங்கம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிளிப்கார்ட் கொடுத்துள்ள விளக்கம்: Wings of Fire புத்தகத்தை விற்பனை செய்ய 28 பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். 2014ம் ஆண்டு ஏப்ரலில் புத்தகம் மறுபதிப்பான போது, அதன் விலை ரூ.275. இவ்வாண்டு ஜூன் மாதத்தில் புத்தகத்தின் விலை ரூ.295 ஆகியது. ஜூலை மாதத்தில் புத்தக விலை ரூ.325 ஆகியது. இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், பிளிப்கார்ட்டின் போட்டி நிறுவனம், இப்புத்தகத்தை ரூ.210 என்ற விலையிலேயே விற்பனை செய்து வருகிறது.