தயாநிதி மீதான ஏர்செல் வழக்கில் சார்ஜ் சீட்?: அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க சொல்லும் சிபிஐ!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது சிபிஐ அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கரன் தலைமையிலான ஏர்செல் நிறுவனம் 2004 முதல் 2006 வரை தனது செல்போன் சேவைகளுக்கு உரிமம் கோரி வந்தது. அதை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தடுத்தார் என்பது புகார்.

அத்துடன் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்பதும் குற்றச்சாட்டு. அப்படி சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதியின் சன் டிவி குழுமத்தில் ரூ600 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்கிறது சிபிஐ.
ஆனால் இந்த விவகாரத்தில் மலேசியா அரசு எந்த ஒரு ஒத்துழைப்பையும் தராததால் வழக்கு கிடப்புக்குப் போனது. உச்சநீதிமன்றம் இந்தியாவில் கிடைத்திருக்கிற ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்த சொன்னது.
இருப்பினும் தற்போதைய நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இயலாது என்பது சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளின் கருத்து. ஆனால் வேறு சில அதிகாரிகளோ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடையே கருத்து நிலவுகிறது; இதனால் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications