"குட்பை"... பெங்களூர் சிறையிலிருந்து வெளியேறும் முன் ஜெ. சொன்ன கடைசி வார்த்தை!
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தான் இருந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் குட்பை என்று சொல்லி விட்டு வந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இந்தத் தகவலை கர்நாடக சிறைத்துறை டிஐஜி ஜெய்சிம்மா கூறியுள்ளார். மேலும் வழக்கம் போல ஜெயலலிதா குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானது குறித்த கடைசி நிமிட நிகழ்வுகள் குறித்து ஜெய்சிம்மா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதாவது...

அமைதி - மன உறுதி - நிதானம்
ஜெயலலிதா ஒரு தைரியமான பெண்மணி. மன உறுதி படைத்தவர். சிறையில் அவர் அமைதியாக இருந்தார். பெங்களூர் தனிக்கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்யும்படி என்னிடம் வழங்கிய உத்தரவு நகலுடன் ஜெயலலிதாவை சந்தித்து விவரம் சொன்னேன்.

சின்னப் புன்னகை மட்டும்
அப்போது அவர் அமைதியாக இருந்தார். எந்த உற்சாகத்தையும் வெளிக்காட்டவில்லை. இருந்தாலும் அவர் முகத்தில் புன்னகையை மட்டும் பார்க்க முடிந்தது.

கைதிகளுக்கு ஸ்வீட் தரவில்லை
நான் கேள்விப்பட்ட வரையில் அவர் தனது மகிழ்ச்சியை சசிகலா மற்றும் இளவரசியுடன் மட்டுமே பகிர்ந்து கொண்டார். ஜாமீன் கிடைத்ததை அறிந்ததும் அவர் சிறையில் மற்ற கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார் என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறு வெளியான தகவல் தவறானது.

நன்றி - குட்பை
ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயலலிதா சிறையை விட்டு செல்லும் முன், "எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக சிறை அதிகாரிகளை நான் மனதார பாராட்டுகிறேன். நான் சிறையில் இருந்த நாட்களில் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அனைவருக்கும் மிக்க நன்றி. குட்-பை" என்று கூறினார்.

காலையில் தியானம்
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நாளான நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா வழக்கம் போல் தூங்கினார். இன்று (நேற்று) காலையில் எழுந்ததும் பத்திரிகைகளை படித்தார். தனது அறையிலேயே சிறிது நேரம் தியானம் செய்தார். தனிக்கோர்ட்டு வழங்கிய உத்தரவு எனக்கு பகல் 2.45 மணிக்கு கிடைத்தது. இதுபற்றி அவரிடம் தகவல் தெரிவித்தோம். 3.10 மணிக்கு சிறையை விட்டு வெளியே செல்ல தயாராக இருந்தார்.

எளிமை
அவர் சிறையில் எளிமையாகவே இருந்தார். சொகுசு வசதிகள் எதையும் அவர் கேட்கவில்லை. கடந்த மாதம் 17-ந் தேதி ஜெயலலிதா சிறைக்குள் வரும்போது 2 சிறிய கம்மல் மற்றும் ஒரு கை கடிகாரம் ஆகியவற்றை எங்களிடம் வழங்கினார். ஜாமீன் உத்தரவாதம் மற்றும் பாண்டு பத்திரத்தில் நேற்று கையெழுத்து போட்ட பிறகு அந்த பொருட்களை மீண்டும் அவரிடம் ஒப்படைத்துவிட்டோம். எந்த புகாரும் கூறாமல் ஜெயலலிதா அதை பெற்றுக் கொண்டார்.

நெகிழ வைத்தார்
என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் அவர் விசாரித்தபோது நான் நெகிழ்ந்துபோனேன். அவர் எளிதில் சந்திக்க முடியாத தலைவர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.

அரசியல் பேசவே இல்லை
சிறையில் ஜெயலலிதா அரசியல் பற்றி ஒரு முறை கூட யாருடனும் விவாதித்ததும் இல்லை, சிறையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை கூட அவர் சந்தித்து பேசியதும் இல்லை என்று கூறியுள்ளார் ஜெய்சிம்மா.












Click it and Unblock the Notifications