"குற்றவாளி" எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவியை 7 நாளில் பறித்திடுக.... தேர்தல் ஆணையம் அட்வைஸ்
டெல்லி: குற்ற வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை 7 நாளில் பறிக்க வேண்டும் என்று நாடாளுமன்றம், சட்டசபை, சட்ட மேலவை செயலகங்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
குற்ற வழக்குகளில் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர்கள் அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்-முறையீடு செய்து, அதன்தீர்ப்பு வரும்வரை பதவி வகிக்க முடியும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8-ன் உட்பிரிவு 4 சலுகை வழங்கி வந்தது.

ஆனால் இந்த சட்டப்பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை செல்லாததாக ஆக்குகிற வகையில், அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற முடியாமல் போனதால் அந்த மசோதாவை நிறைவேற்ற இயலாமல் போய் விட்டது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்து, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அந்த முடிவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியதால் அவசர சட்ட முடிவு கை விடப்பட்டது.
இந்த நிலையில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத்தின் பதவி உச்சநீதிமன்ற தீர்ப்பின்கீழ் முதன் முதலாக பறிக்கப்பட்டது.
இதன்பின்னர் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி., ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி. பதவிகள் 2013-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந்தேதி பறிக்கப்பட்டன.
ஆனால் குற்ற வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இது தொடர்பாக நாடாளுமன்றமும், சட்டசபைகளும் பதவி பறிப்பு நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை செயலகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊழல் வழக்குகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்படுகிறபோது உடனடி பதவி பறிப்புக்கு அது வழி வகுக்கிறது.
ஆனால், இதுதொடர்பான அறிவிக்கையை நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட சட்டசபைகளும் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த எம்.பி., எம்.எல்.ஏ. தொடர்ந்து பதவி வகிக்க நேருகிறது. இது அரசியல் சாசனம் பிரிவு 103 மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.
குற்ற வழக்குகளில் தீர்ப்பு வந்த உடனேயே எந்தவித பாகுபாடுமின்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தீர்ப்புக்கும், பதவி பறிப்பு அறிவிக்கைக்கும் இடையே 7 நாட்கள்தான் இடைவெளி இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications