"பொருளாதார நிபுணரால் முடியாததை டீ விற்றவன் சாதித்திருக்கிறான்".. மன்மோகன் சிங்கை விமர்சித்த மோடி
காந்திநகர்: "ஒரு பொருளாதார நிபுணரால் சாதிக்க முடியாததை டீ விற்ற சாமானியன் சாதித்திருக்கிறான்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார அறிஞர்கர்களில் ஒருவராக கருதப்படுபவர். அவர் பிரதமராக இருந்த 10 ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அவர் செய்த சீர்திருத்தங்கள் ஏராளம். அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அரசியலை கடந்து அவர் சிறந்த பொருளாதாரவாதி என எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரே பாராட்டியுள்ளனர்.
பாஜக ஆட்சி அமைந்த பிறகும் பல பொருளாதார விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியே பல முறை மன்மோகன் சிங்கை அவரது பொருளாதார அணுகுமுறைக்காக பல முறை பாராட்டியுள்ளார்.

"எனது ஆட்சியில் ஈடு இணையற்ற வளர்ச்சி"
இந்நிலையில், குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்தப் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேசிய போது, "இந்தியாவில் எனது தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக நாடு பல்வேறு துறைகளில் ஈடு இணையற்ற வளர்ச்சியை கண்டுள்ளது. சாமானிய மக்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். அதனால்தான், நான் ஆட்சிக்கு வந்ததும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல நலத்திட்டங்களை கொண்டு வந்தேன்.

"எதிர்க்கட்சிகள் கேலி செய்தன"
ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர், வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு, அனைவருக்கும் வங்கிக்கணக்கு, மக்களுக்கு நேரடியாக மானியம் செலுத்துவது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த திட்டங்களை கொண்டு வரும் எதிர்க்கட்சிகள் என்னை விமர்சித்தன. எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என கேலி செய்தன. ஆனால், வெற்றிகரமாக அந்த திட்டங்களை எல்லாம் மத்திய பாஜக அரசு நிறைவேற்றிக் காட்டியது. இதனால் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட்டது. அது அப்படியே நாட்டின் பொருளாதாரத்திலும் பிரதிபலித்தது.

பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் 10 ஆண்டுகாலம் இந்தியாவில் ஆட்சி செய்தது. மிகப்பெரிய பொருளாதார நிபுணர் என கூறப்படும் மன்மோகன் சிங் தான் அப்போது பிரதமராக இருந்தார். மன்மோகன் சிங் பல பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என காங்கிரஸ் பெருமை பீற்றிக் கொள்கிறதே... அப்படி அவர் என்ன செய்தார்? காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சர்வதேச பொருளாதார குறியீட்டில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.

டீ விற்ற சாமானியன்..
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு, இந்தியா ஒரே ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்தது. அதன் பிறகுதான், நான் பிரதமர் ஆனேன். நான் என்னை ஒருபோதும் பொருளாதார அறிஞர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டது கிடையாது. ஆனால், எனது 8 ஆண்டுகால ஆட்சியில் உலகின் 5-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறியது. ஒரு பொருளாதார நிபுணர் சாதிக்க முடியாததை, டீ விற்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியனால் செய்ய முடிந்திருக்கிறது" இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications