ஸ்பெக்ட்ரம்: தயாளு, கனிமொழி, ராசா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்!!
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு இன்று திடீரென குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்த போது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டுக்காக ரூ200 கோடியை கலைஞர் டிவி ஆதாயமாக பெற்றது என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி, ரூ200 கோடி ஆதாயமாக பெற்றதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாக கடந்த ஆண்டு கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்று குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு திடீரென் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் பராசரன், சாதாரண குற்றப் பிரிவுகளின் கீழேயே கனிமொழி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கலாம், அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் நடவடிக்கை தேவையில்லை என அமலாக்கப் பிரிவிடம் தெரிவித்திருந்தார். இதனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது ஒத்திபோடப்பட்டது.
பின்னர் திடீரென டிசம்பர் 18ந் தேதியன்று சொலிசிட்டர் ஜெனரல் பராசரன் அமலாக்கப் பிரிவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் "தமது முந்தைய நிலையை தாம் மாற்றிக் கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டோர் மீது அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழேயே அமலாக்கப் பிரிவு உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என்றும் கூறியிருந்தார்.
இதனால் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்டோர் மீது அமலாக்கப்பிரிவு எந்த நேரத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது.
திடீரென குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த மறுநாள் திடீரென டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில் கனிமொழி, ஆ. ராசா மற்றும் கலைஞர் டி.வியின் பங்குதாரர்களில் ஒருவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் பல்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
என்னவாகும்?
தற்போது கனிமொழி, ஆ. ராசா, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பொதுவாக 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.