பணியில் தொடரும் தொல்லை.. தஞ்சமடைந்த 2ஜி வழக்கு விசாரணை அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் அபயம்
டெல்லி: பணியில் தனக்கு தொல்லை தரப்படுவதாக கூறி, 2ஜி வழக்கில் அமலாக்கத்துறையின் புலன் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய ராஜேஸ்வர் சிங் உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவருக்கு எதிரான விசாரணைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிபிஐ சார்பில் விவேக் பிரியதர்ஷி, அமலாக்கத்துறை சார்பில் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசா, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 6 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ராஜேஸ்வர்சிங் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனக்கு பணியில் தொல்லைகள் தரப்படுவதாகவும், தேவையற்ற வழக்குகளால் பணி உயர்வு பாதிக்கப்படுவதாகவும் தனது மனுவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது: நேர்மையுடன் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை செய்து, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புள்ள ரூ.1.06 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க பரிந்துரைத்தேன். இதன்பிறகு, எனக்கு எதிராக அனாமதேய புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த சதிகள் குறித்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், அல்லது, 2ஜி வழக்கு விசாரணையில் இருந்து நான் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் அமர்வு இதை விசாரித்தது. ராஜேஸ்வர்சிங்கிற்கு எதிரான விசாரணைகளுக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான நிதி முறைகேடு புகார்களை விசாரித்தபோது ராஜேஸ்வர்சிங் அந்த பணியிலிருந்து அகற்றப்பட்டார். ஆனால் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, வழக்கில் தலையிட்ட பிறகு, சுப்ரீம்கோர்ட், ராஜேஸ்வர்சிங்கை அமலாக்கத்துறையிலேயே தொடர உத்தரவிட்டது. வழக்குவிசாரணை முடிவடைந்ததால்தான் அவரை மாற்றியதாக நிதி அமைச்சகம் பதில் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications