இரவு வரை ரெய்டு.. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆலோசகர் வீட்டில் இருந்து கிளம்பிய ED அதிகாரிகள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த சோதனையை முடித்துக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியேறினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டி பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படுவது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ராஞ்சியில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்புடைய சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜனவரி 3) காலை முதல் சோதனை நடத்தினர்.

ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத்தின் வீடு மற்றும் சாஹிப்கஞ்ச் துணை ஆணையரின் இல்லம் உள்பட 12 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. முன்னதாக அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மன்களை முதல்வர் ஹோமந்த் சோரன் புறக்கணித்திருந்தார்.
மேலும், ஏற்கெனவே தனது சொத்துக்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அமலாக்கத்துறையிடம் வழங்கிவிட்டதாகவும், தனக்கு அமலாக்கத்துறை சார்பாக அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.
ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை இதுவரை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பியது.
அதில், விசாரணைக்கான தேதி, நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்யுமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. 7வது சம்மன் கிடைக்கப் பெற்ற 2 நாள்களுக்குப் பிறகு, அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் அனுப்பிய பதிலில், அமலாக்கத்துறை ஒருபக்க சார்பான விசாரணையை நடத்தி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தான் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், இரவு 11 மணிக்கு மேல், ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத்தின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியேறினர்.
இதற்கிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை மறுத்த ஹேமந்த் சோரன், "பாஜகவின் கற்பனையின் விளைவாக இந்த யூகங்கள் எழுந்துள்ளன. இதில் சிறிதும் உண்மை இல்லை. எனது மனைவியிடம் ஆட்சியை ஒப்படைப்பது குறித்து பொய்க் கதையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications