கலைஞர் டிவி.. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தயாளுவுக்கு நோட்டீஸ்! மார்ச் 28ல் ஆஜராக உத்தரவு!!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ரூ200 கோடியை கலைஞர் டிவி பெற்றது என்ற குற்றச்சாட்டில் அதன் பங்குதாரராக இருந்த கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் விடுதலையானார்
இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் மற்றொரு பங்குதாரரரும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவி ரூ200 கோடி பெற்ற விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இதில் கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கலைஞர் டிவி மீதான இந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கனிமொழி, ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை என்று கடந்த ஆண்டு ஜூலை 27ந் தேதி சொலிசிட்டர் ஜெனரல் பராசரன் அமலாக்கப் பிரிவிடம் தெரிவித்திருந்தார். பின்னர் டிசம்பர் 18ம் தேதியன்று பராசரன் அனுப்பிய மற்றொரு கடிதத்தில், தமது முந்தைய நிலையை மாற்றிக் கொள்வதாகவும் அமலாக்கப் பிரிவு உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
இதனால் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கனிமொழி, ஆ. ராசா மீது எந்த நேரத்திலும் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கலைஞர் டிவி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு அமலாக்கப் பிரிவு திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மார்ச் 18-ந் தேதி அமலாக்கப்பிரிவு இயக்குநரகத்தின் கமல் சிங் இந்த சம்மனில் கையெழுதிட்டு அனுப்பியுள்ளார். இதில் மார்ச் 28-ந் தேதி பகல் 12 மணிக்கு டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தின் முன்பு தயாளு அம்மாளோ அல்லது அவரது பிரதிநிதிகளோ நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கலைஞர் டிவிக்கும் தயாளு அம்மாளுக்குமான தொடர்பு குறித்த தகவல்களை அன்றைய விசாரணையின் போது தெரிவிக்கவும் அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள நேரத்தில் அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது திமுக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications