காங்கிரசுக்குள் கோஷ்டி மோதல்.. டெல்லியில் ராகுல் காந்தியை ரகசியமாக சந்தித்த இளங்கோவன்
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், தொகுதிப் பங்கீடு, பிரசார யுத்திகள் உள்ளிட்டவை தொடர்பாக இரு கட்சிகளும் இதுவரை ஆலோசித்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்ததாகவும், அப்போது வரும் மார்ச் 20ம் தேதி திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் பங்கேற்கும் திமுக தலைவர் கருணாநிதியுடன் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்று இளங்கோவன் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது பற்றி இளங்கோவன், கூறுகையில் 'ராகுல் காந்தியை வியாழக்கிழமை நான் சந்திக்கவில்லை. உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் நடைபெறும் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்தேன். ராகுலுடனான எனது சந்திப்பு, பிரசார உத்திகள் போன்றவை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தேர்தல் கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் பேசி வருகிறேன் என்பது மட்டுமே உண்மை' என்றார்.
அதேநேரம் ராகுல் காந்தி அலுவலக ஊடக ஒருங்கிணைப்பாளர் மிதாக்ஷ "ராகுல் காந்தியை இளங்கோவன் சந்தித்தது உண்மை. ஆனால், அதன் விவரங்களை வெளியிட விரும்பவில்லை' என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்க வேண்டும் என்று ஏற்கெனவே அவரது தலைமை மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், கே.வி. தங்கபாலு, முன்னாள் எம்எல்ஏ வசந்தகுமார் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.
இருப்பினும், அனைத்து அதிருப்தி தலைவர்களையும் இளங்கோவனையும் டெல்லிக்கு கடந்த மாதம் வரவழைத்து ராகுல் காந்தி சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதன் பிறகுதான் தேர்தலையொட்டி, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.
இதன்பிறகும், சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் நடத்திய நேர்க்காணலிலும், விருப்ப மனு தர வந்தவர்களிடம் அவர்கள் ஆலோசனை நடத்தவில்லை. இந்நிலையில்தான் இளங்கோவன், ராகுலை ரகசியமாக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.