இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆய்வில் திடுக் தகவல்
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான 'க்ரை' நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
500% அதிகரிப்பு
இதில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 2006-ம் ஆண்டு 18,967 என இருந்த மேற்படி குற்ற செயல்கள், கடந்த 2016-ல் 1,06,958 என அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றில் ஒரு பங்கு
கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறுமி
அந்தவகையில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாவதும் இந்த ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்கள்
இதேபோல் குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி க்ரை அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.