ஹெச். எல். தத்துவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி?
டெல்லி: தேசிய மனித உரிமை ஆணைய புதிய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹெச். எல்..தத்து நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்களான மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றி கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்ற எச்.எல். தத்துவின் பெயரை தேர்வுக் குழு இறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, அவரது பெயரை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தேர்வுக் குழு அனுப்பி வைத்தது.
இதற்கு ஒப்புதல் தெரிவித்து ஆணையத்தின் புதிய தலைவராக தத்துவை நியமிக்கும் ஆணையை குடியரசுத் தலைவர் விரைவில் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு சில மாதங்கள் அந்த பதவி காலியாக இருந்தது.
இதையடுத்தி ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக பணியாற்றும்படி அதன் உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிரியாக் ஜோசஃப் கேட்டுக் கொள்ளப்பட்டார்.. இந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தத்துவின் பெயரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications