கேரள கவர்னராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம்.. நோட்டாவை அறிமுகப்படுத்தியவர்!
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய கவர்னர்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர். அந்தவகையில் கேரள கவர்னரான ஷீலா தீட்சித் கடந்த செவ்வாய்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றைய தினமே ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நேற்று நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் கேரள கவர்னராக பதவி ஏற்க இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்காரர்...
கேரள கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் 65 வயதான நீதிபதி பி.சதாசிவம், கடந்த 1949-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பழனிச்சாமி கவுண்டர், தாயார் பெயர் நாச்சாயம்மாள்.

கல்வி...
மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை தொடங்கிய சதாசிவம், சிவகாசியில் உள்ள அய்ய நாடார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் சென்னை அரசினர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து சென்னை ஹைகோர்ட்டில் அரசு வக்கீலாக பொறுப்பேற்றார்.

ஹைகோர்ட் நிரந்தர நீதிபதி...
1973-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் அரசு வக்கீலாக இருந்த சதாசிவம், இவருடைய உண்மையான உழைப்பு, நேர்மையான செயல்களால் ஹைகோர்ட் நிரந்தர நீதிபதியாக கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி...
கடந்த 2007-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் நீதிபதியாக சண்டிகார் ஹைகோர்ட்டில் பொறுப்பு ஏற்ற சதாசிவம், 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஆனார்.

ஓய்வு...
பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் 40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். கடந்த ஏப்ரல் 26-ந் தேதி அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

குடும்பம்...
நீதிபதி பி.சதாசிவத்துக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சீனிவாசன், செந்தில் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் சீனிவாசன் கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு முடித்து கோவையில் தொழில் செய்து வருகிறார். 2-வது மகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு விவசாயத்தை கவனித்து வருகிறார்.

முக்கியத் தீர்ப்புகள்...
பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான சதாசிவம், தனது பதவிக்காலத்தில் பல முக்கியமான வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகள், உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தேவேந்தர் பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை உறுதி செய்தது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டாவை இணைக்க உத்தரவிட்டது உள்ளிட்டவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.












Click it and Unblock the Notifications