ஓடும் ரயிலில் குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கையை காப்பாற்றிய அண்ணனின் டிவிட்!
டெல்லி: ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர்.
பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர்.
ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

படமெடுத்த இளம் பெண்
இதனால் அப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார். சமயோஜிதமாக ஒரு வேலையை செய்தார் அப்பெண். அதாவது தனது செல்போனில் வாலிபர்கள் மது குடிப்பதையும், மது பாட்டிலை பைகளில் வைத்துள்ளதையும் நைசாக போட்டோ எடுத்த அந்த பெண், அதை தனது அண்ணன் அன்குர்சிங்கிற்கு அனுப்பி உதவி கேட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சருக்கு பார்வேர்ட்
இதைப்பார்த்த அன்குர்சிங் அதிர்ச்சியடைந்தார். ஓடும் ரயிலை விரட்டி பிடித்து தங்கைக்கு உதவி செய்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்த அன்குர்சிங், ஒரு முடிவுக்கு வந்தார். தங்கை அனுப்பிய போட்டோவையும், ரயில் விவரத்தையும் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு அதை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும், ரயில்வே அமைச்சக டிவிட்டர் அக்கவுண்டுகளுக்கு மென்ஷன் செய்தார்.

உதவிய நல் உள்ளங்கள்
ரயில்வே அமைச்சக டிவிட்டர் தளத்தை பாலோ செய்யும் டிவிட்டர் பயனாளிகள் பலரும் இதை பார்த்து உடனடியாக அன்குர்சிங்கிற்கு டிவிட் செய்ய ஆரம்பித்தனர். சிலர் ரயில் அடுத்ததாக சென்றடையும் ரயில் நிலைய போலீஸ் தொலைபேசி எண்களை கொடுத்து உதவினர், சிலர் அந்த டிவிட்டை பலருக்கும் அனுப்பி உதவி கேட்க ஆரம்பித்தனர்.

இணையதள புரட்சி
வாலிபர்கள் மது குடித்துக்கொண்டேயிருக்க, ரயில் பயணித்துக் கொண்டேயிருக்க.. யாருக்குமே தெரியாமல் இங்கு ஒரு இணைய புரட்சியே நடந்து கொண்டிருந்தது. இந்த தகவல் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்ததும், அடுத்த ரயில் நிலையத்திலேயே குறிப்பிட்ட கோச்சில் ஏறிய போலீசார், மது பான பாட்டிலுடன் இருந்த வாலிபர்களை பிடித்து வெளியே இழுத்து சென்றனர். மேலும், அந்த பெண்ணிடமும் புகார் எழுதி பெற்றுக் கொண்டனர்.

ஊரெல்லாம் அண்ணன்கள்
ஓடும் ரயிலில் மது குடித்தது, பெண்ணை கேலி செய்தது போன்ற வழக்குகள் அந்த வாலிபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டிவிட் செய்துள்ள அன்குர்சிங், "ஒரு அண்ணனாக எனது தங்கையை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் நான் இருந்தேன். ஆனால் அவளுக்கு பல அண்ணன்கள் இருப்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களின் பலத்தை மட்டுமல்லாது, மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் உள்ள நாடு என்பதை புரிந்து கொண்டதாகவும் அன்குர்சிங் டிவிட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications