விரைவில் கைதாகிறார் விஜய் மல்லையா? கிரீன் சிக்னல் காட்டியது இங்கிலாந்து
விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
டெல்லி: இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டன் நாட்டுக்கு தப்பிவந்த விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றுவிட்டர்.

வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற பணத்தை சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக குற்றம்சாட்டிய பொருளாதார அமலாக்கத்துறையும் அவரிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய சம்மன் அனுப்பியது. ஆனால், விஜய் மல்லையா இதற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகிறார்.
இதையடுத்து, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் இங்கிலாந்தில் வசித்துவரும் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவர கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை பரிசீலித்த இந்திய உள்துறை அமைச்சகம் தற்போது அந்த உத்தரவை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா - பிரிட்டன் இடையே கடந்த 1992-ம் ஆண்டு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டு அரசுகளாலும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைக்க இந்த உடன்படிக்கை வழிவகை செய்கிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சத்தின்படி இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது.
இதுதொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு அதிகாரிகள். சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை உடனடியாக கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications