குப்பாச்சு குழப்பாச்சு கதையாக மாறும் ஆதார் அட்டை...
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு குளறுபடியான நடவடிக்கைகளால் ஆதார் அட்டை திட்டம் மிகுந்த குழப்பத்தை நோக்கி சென்று வருகிறது.
ஜனவரியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டார்.
எப்போதும் அரசு திட்டங்களை செயல்படுத்த தயங்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ராகுல் கோரிக்கை விடுத்ததும் உடனடியாக செயல்பட்டு ஜனவரி இறுதிக்குள்ளேயே மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அறிவித்தது.
ஆனால் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.5000 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, மானிய விலை சமையல் சிலிண்டர்களை நேரடி மானிய திட்டத்தின் மூலம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற கட்டுப்பாட்டையும் விதித்தது.
இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் சிலிண்டரை பெற்ற பின்னர், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு இது மிகவும் சிக்கலாக இருந்து வந்தது. பெரும்பாலானவர்களால் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது..
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு அறிவித்த நேரடி மானிய திட்டம் முறையாக செயல்படாதது அரசுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மக்கள் பலர் ஆதார் அடையாள அட்டை பெறாததால் இத்திட்டத்தை முறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உருவானது.
ஆனால்,அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என கூறப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்படி ஆதார் திட்டம் மும்முரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் நேரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது..
ஆனாலும், இடத்திற்கு தகுந்தாற் போல் ஆதார் அட்டையின் அவசியம் மாறுபடும் என ஆதார் அட்டை திட்ட தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார். ஆதார் அட்டை திட்டம் துவங்கப்பட்ட போது, ஆதார் அட்டை இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் எதையும் பெற முடியாது என்றும் இவர் கூறியிருந்தார்.
இவ்வாறாக பல்வேறு முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பெற்று பந்தாடப்பட்டு வரும் ஆதார் அட்டை திட்டம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலையாகும்.
அதேநேரத்தில் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்ட பலருக்கு இன்னும் அட்டை வரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications