விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு- உ.பி.யில் மகா பஞ்சாயத்து- திரண்ட விவசாயிகள்- செப்.27-ல் பாரத் பந்த்!
முசாஃபர்நகர்: மத்திய பாரதிய ஜனதா அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகரில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 27-ல் நாடு தழுவிய பாரத் பந்த் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய பா.ஜ.க. அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 9 மாதங்களாக பல மாநில விவசாயிகள் முகாமிட்டு போராடி வருகின்றனர்.
மத்திய அரசும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் விவசாய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர தயார் என்கிறது. ஆனால் போராடும் விவசாயிகளோ, 3 விவசாய சட்ட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
இதனால் மத்திய அரசும் விவசாய சங்க பிரதிநிதிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. உச்சநீதிமன்றமும் இதில் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 9 மாதங்களை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் விபத்துகள், இயற்கை மரணங்கள் என 9 மாதங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணித்து போயுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்துதான் கிராமங்கள் தோறும் சுழற்சி முறையில் டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கின்றனர். ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உ.பி. மாநில விவசாயிகளும் கணிசமான அளவில் டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஹரியானாவில் தடியடி
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, விவசாயிகளின் ஒவ்வொரு மறியல் போராட்டத்தையும் மூர்க்கமாக ஒடுக்குகிறது. அண்மையில் விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் மிக கொடூரமான் தடியடியை நடத்தியது. இது நாடு முழுவதும் விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.

விவசாயிகளின் மகா பஞ்சாயத்து
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று மகா பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் இந்த மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சாரை சாரையாக முசாஃபர்நகரில் குவிந்தனர். அத்தனை விவசாயிகளுக்கும் உணவு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் முன்னேற்பாடாக செய்யப்பட்டன. இன்றைய மகா பஞ்சாயத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

உ.பி, உத்தரகாண்ட் தேர்தல்
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எப்படியான வியூகம் வகுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் விவசாய சட்டங்களை கொண்டுவந்த பாஜகவை தோல்வியடைய செய்வோம் என டெல்லியில் போராடும் விவசாயிகள் பிரசாரம் செய்தனர். தற்போதும் அதே போல ஒரு முடிவு எடுப்பது குறித்து விவாதித்தனர்.

பஞ்சாப் தேர்தலில் நிலைப்பாடு
ஏற்கனவே போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாது என்கிற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் பஞ்சாப் மாநிலமும் அடுத்த ஆண்டு சட்டசபைத தேர்தலை எதிர்கொள்கிறது. அங்கு விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஆகையால் பஞ்சாப் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பாரத் பந்த் போராட்டம்?
இந்த கூட்டத்தின் முடிவுகள் தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தவாலே கூறுகையி,, உ.பி, உத்தரகாண்ட் தேர்தலுக்கான மிஷன் தொடங்கிவிட்டது. வரும் 27-ந் தேதி விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடைபெறும் என்றார். டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், எங்கள் போராட்டம் தொடரும். எத்தனை நாட்கள் இந்த போராட்டம் நீடிக்கும் என கேட்க வேண்டாம். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாமல் நாங்கள் வீடுகளுக்கு திரும்ப மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications