வறுமை தாங்க முடியல, கிட்னியை வித்துக்கிறேன்: முதல்வரிடம் அனுமதி கோரிய விவசாயி
வர்தா: தனது சிறுநீரகத்தை விற்க மகாராஷ்டிரா மாநில முதல்வரிடம் அம்மாநில விவசாயி அனுமதி கோரியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தில் உள்ள திக்ராஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் தியானேஷ்வர் லோகந்தே(50). விவசாயி. விவசாயம் சரியாக நடக்காததால் வறுமையில் வாடி வருகிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரித்வி ராஜ் சவான் அரசு நிவாரணத் தொகை அறிவித்தது.
நிவாரணத் தொகை பெற தகுதியிருந்தும் லோகந்தேவுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் முதல்வர் சவானுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
என்னை நம்பி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதால் என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. நிவாரணத் தொகை பெற நான் தகுதி உடையவன் என்று 2 மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் இன்னும் பணம் கிடைக்கவில்லை. அதனால் வறுமையை போக்க எனது சிறுநீரகத்தை விற்க அனுமதி அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தின் நகலை அவர் மாவட்ட கலெக்டர் நவீன் சோனா, வர்தா எம்.பி. தத்தா மெகே ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தை பெற்றுக் கொண்ட தத்தா இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் நவீனுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக லோகந்தே மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நிவாரணம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார், சேதமடைந்த பயிர்களை தீ வைத்து எரித்தார். இருப்பினும் அவரால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications