குஜராத்தில் ஒரு வயது பேத்தி உள்பட 7 பேரை கொன்றுவிட்டு தற்கொலை செய்த விவசாயி
சூரத்: குஜராத்தில் விவசாய தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள உப்லி பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ராவன் கனத்(38). விவசாய தொழிலாளி. அவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது மனைவி சாந்தா(36), மகள்கள் யமுனா(19), ஹேம்கு(17), ஜிசிலா(14), மகன்கள் அக்ஷய்(17), விரால்(12), யமுனாவின் மகள் ப்ரீத்தி(1) ஆகியோரின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டிற்கு சென்ற உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் ஏழு உடல்களும், கனத் தூக்கில் பிணமாகத் தொங்கியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கனத் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் தான் அவர் தனது குடும்பத்தாரை கொலை செய்துள்ளார் என்றும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.