அக்டோபர் வரை போராட்டம் தொடரும்...விவசாய சங்கத்தினர் அறிவிப்பு
காசியாபாத் : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காசிபூர் எல்லையில் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ராகேஷ் திகாயத், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டமும் முடிவுக்கு வராது.

சட்டங்களை திரும்பப் பெறும் வரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்பதே எங்களின் முழக்கம். அக்டோபர் மாதத்திற்குள் சட்டங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால், எங்கள் போராட்டமும் அக்டோபர் வரை தொடரும். அக்டோபர்-நவம்பர் மாதம் வரை போராட்டத்தை தொடர அனைவரும் தயாராக இருங்கள்.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க அரசு கையாண்டு வரும் யுக்திகள் சாமானிய மக்களைத் தான் பாதிக்கும் என எச்சரித்துள்ளார். மேலும் பிப்ரவரி 6 ம் தேதி சாலைகளை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் விவசாயிகள் டெல்லிக்கும் நுழைவதை தடுக்க எல்லை பகுதிகளில் சிமெண்ட் தடுப்புக்களை போலீசார் அமைத்துள்ளனர். மேலும் எல்லைகளை கண்காணிக்க அப்பகுதிகளில் அதிக அளவில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications