3வதும் பெண் குழந்தை... ஆத்திரத்தில் மதுவைக் குடிக்க வைத்து குழந்தையைக் கொன்ற தந்தை
ஹைதராபாத்: மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த ஆத்திரத்தில் தனது 18 மாத குழந்தைக்கு மதுவை கொடுத்து கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி. ஷேக் இஸ்மாயில் என்ற மெக்கானிக் குண்டூர் மாவட்டத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
இவரது மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த இஸ்மாயிலிற்கு மூன்றாவதும் பெண் குழந்தை என்ற செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால், மதுவுக்கு அடிமையான இஸ்மாயில், நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகளைப் பார்த்ததும், தனது ஏமாற்றம் நினைவுக்கு வந்துள்ளது. உடனே, தனது பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை திறந்து மகளின் வாயில் வற்புறத்தி ஊற்றி, குழந்தையை மது குடிக்க வைத்துள்ளார்.
இதனால், தொண்டை மற்றும் குடல் எரிச்சல் ஏற்பட்டு குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழ, பயந்து போன இஸ்மாயில் குழந்தையை உடனடியாக குண்டூர் அரசு ஆஸ்பத்திரி வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார்.
உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிச் சென்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை நேற்றிரவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மதுவை ஊற்றி குழந்தையைக் கொன்ற அக்கொடூரத் தந்தையைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications