கோரமண்டலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து ஏன்.. முதற்கட்ட விசாரணையில் திடுக் தகவல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதற்கு தவறான சிக்னலே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 650 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை அடுத்தடுத்து மோதிக்கொண்டதே மிக மோசமான விபத்துக்கு காரணம்.
விபத்து எப்படி நடந்தது? கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. மாலை சுமார் 6.30 மணி அளவில் பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தார்கள்.
அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்ட பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இதுவே கொடூரமான விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் கவாச் சிஸ்டமும் கோரமண்டல் ரயிலில் இல்லை. இதேபோல் யஷ்வந்த்பூர் ஹவுரா ரயிலும் இல்லை. விபத்து எப்படி நடந்தது என்பது தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தவறான சிக்னல் கொடுத்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
சென்னை வந்த கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து செய்ததே விபரீதம் நடக்க காரணம் என்று முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விபத்து குறித்து பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, "சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன. அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன என்றார்.
ஒடிஷா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், "ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமானது. அது நடந்திருக்கக் கூடாது. சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த விபத்து நேரிட்டிருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க ரயில்வே விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது. ரயில்வே அமைச்சர் காலையிலேயே நேரில் வந்துவிட்டார். விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்து வருகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications