ஃபெரா விசாரணைக்கு தடை கோரிய விஜய மல்லையா மனு தள்ளுபடி! ரூ10 லட்சம் அபராதம் விதித்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தம் மீதான ஃபெரா வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய தொழிலதிபர் விஜய மல்லையாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் வழக்கு செலவாக ரூ10 லட்சம் அபராதம் செலுத்தவும் விஜய மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான தயாரிப்புகளை வெளிநாட்டில் விளம்பரப்படுத்துவதற்காக நிதி ஏற்பாடு செய்ததில் வெளிநாட்டு பணபரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் (ஃபெரா) நடைமுறைகளை விஜய மல்லையா மீறினார் என்பது அமலாக்க பிரிவு குற்றச்சாட்டு.

மேலும் 1995ஆம் ஆண்டு டிசம்பரில் லண்டனை சேர்ந்த பென்னட்டன் பார்முலா என்ற நிறுவனத்துடன் கிங்பிஷர் மதுபான தயாரிப்புகளை வெளிநாட்டில் பிரபலப்படுத்துவதற்கு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் மல்லையாவிடம் விசாரணை நடத்தவும் அமலாக்க பிரிவு முடிவு செய்திருந்தது.
கிங்பிஷர் நிறுவனத்தின் சின்னத்தை லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது இடம்பெற செய்வதற்காக கடந்த 1996, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் 2 லட்சம் டாலர்களை மல்லையா அளித்துள்ளார். இதற்கு ரிசர்வ் வங்க வங்கியின் ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பே வெளிநாட்டு பணபரிமாற்ற ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குற்றச்சாட்டு.
இவை தொடர்பாக அமலாக்க பிரிவு அனுப்பிய சம்மன்களுக்கு பதிலளிக்காதததால் மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மல்லையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை அடுத்து மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தம் மீதான விசாரணைக்கு விஜய மல்லையா தடையும் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்படி அமலாக்க பிரிவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதன் மீதான இன்றைய விசாரணையின் போது விஜய மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான பெஞ்ச், வழக்கு செலவுக்காக ரூ10 லட்சம் அபராதம் செலுத்தவும் விஜயமல்லையாவுக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications