கல்யாணமாகி 30 நாள் தான் ஆகுது.. ஆனா 1.5 மாதம் கர்ப்பம்.. மருத்துவர் சொன்னதை கேட்டு தலை சுத்திடுச்சு
டெல்லி: இளம்பெண் ஒருவருக்குச் சமீபத்தில் தான் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே அவர் கருவுற்ற நிலையில், மருத்துவரிடம் சென்றபோது அவர் 1.5 மாதங்கள் கருவுற்று இருப்பதாக மருத்துவர் சொல்லியுள்ளார். இதனால் அவர் ஒன்றும் புரியாமல் குழம்பிய நிலையில், மருத்துவர் கொடுத்த விளக்கத்தால் அவர் அதிர்ந்து போனார்.
பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் நாம் கனவிலும் யோசிக்காத பல வினோதமான விஷயங்களைப் பார்க்கலாம். இப்படி கூட நடக்குமா என நாம் யோசிக்கும் விஷயங்கள் கூட நடப்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம்.. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது அந்த இளம் பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

கருவுற்ற பெண்
ஒரே மாதத்தில் அந்த பெண்ணுக்குக் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை செய்த நிலையில், அதில் தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இது குட் நியூஸ் தான் என்றாலும் அவர் 1.5 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியதால் அவர் குழப்பமடைந்தார்.
தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்ததாகவும் அன்றைய தினம் தான் முதல்முறையாக உடலுறவு கொண்டதாகவும் மருத்துவரிடம் கூறியிருக்கிறார். ஆனாலும் வயிற்றில் வளரும் கரு 1.5 மாத வயதுடையது என்று மருத்துவர் தெரிவித்தார். திருமணம் நடந்தே ஒரு மாதம் தான் ஆகும் நிலையில், 1.5 மாத கர்ப்பம் எனச் சொன்னதால் அந்த பெண் பீதி அடைந்தார். ஏன் இப்படி எனப் புரியாமல் குழம்பினார்.
மருத்துவர் சொன்ன விளக்கம்
இருப்பினும், அதன் பிறகே அந்த மருத்துவர் இது குறித்து விளக்கமளித்தார். கர்ப்ப காலம் என்பதை எப்படிக் கணக்கிடுவார்கள் என்பது குறித்து விளக்கியிருக்கிறார். அதாவது கருத்தரித்த நாளிலிருந்து கர்ப்பத்தின் வயது கணக்கிடப்படுவதில்லையாம். மாறாக, ஒரு பெண்ணின் கடைசி மாதவிடாய் காலத்தின் முதல் நாளிலிருந்து கர்ப்பத்தின் வயது கணக்கிடப்படும் என்றும் இதைத் தான் கர்ப்பகால வயது" (Gestational Age) என்று அழைப்பார்கள் என மருத்துவர் விளக்கமாகக் கூறியுள்ளார்.
என்ன அர்த்தம்
அதாவது பெண் ஒருவருக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்படும்போது, மருத்துவர்கள் கருவின் வயது எத்தனை வாரங்கள் ஆனது என சொல்வார்கள். அது உண்மையான கருத்தரிப்பு தேதியை விட இரண்டு வாரங்கள் அதிகமாகவே இருக்கும். ஏனெனில், கருமுட்டை வெளியிடுதல் மற்றும் கருத்தரிப்பு பொதுவாக மாதவிடாய்க்குப் பிறகு சுமார் இரண்டு வாரங்களில் கழித்தே நிகழும்.
ஏன் இப்படி!
எனவே, கர்ப்பிணிப் பெண்ணுக்கு அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யும்போது அதில் கருவின் வயது 1.5 மாதங்கள் எனக் காட்டினால்.. அப்பெண் 1.5 மாதங்களுக்கு முன்பு கருத்தரித்தார் என்று அர்த்தமல்ல. மாறாக, அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு சுமார் ஆறு வாரங்கள் ஆகிவிட்டன என்பதையே இது குறிக்கிறது. இது ஒருவரின் பிறந்தநாளுக்கு முன்பே அவரது வயதைக் கணக்கிட தொடங்குவது போன்றதாகும். ஒருவர் எப்போது கருத்தரித்தார் என்பதைக் கண்டறிவது கடினம் என்பதால் மருத்துவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி கர்ப்பத்தின் வயதைக் கணக்கிடுகிறார்கள்.
இதன் மூலம் கரு எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை எளிமையாகக் கணக்கிடலாம். மேலும், பிரசவத் தேதி, மகப்பேறு பராமரிப்பு, சோதனைகளுக்கும் இது உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்!












Click it and Unblock the Notifications