கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட கேரளாவின் காசர்கோடு- இந்தியாவுக்கே வழிகாட்டி
காசர்கோடு: கொரோனா வைரஸ் தொற்று நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டதால் கேரளாவின் காசர்கோடு இந்தியாவுக்கே முன்மாதிரியான வழிகாட்டியாக உருவெடுத்திருக்கிறது.
Recommended Video
கேரளாவின் காசர்கோடு.. பெருநகரங்களில் இருந்து தொலைவில் உள்ளது. உலகம் கொரோனா வைரஸ் கண்டு மிரள தொடங்கிய பிப்ரவரி மாதத்தின் தொடக்கம்..
பிப்ரவரி 3-ந் தேதி சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து காசர்கோடு வந்திறங்கிய மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்தியாவின் 3-வது கொரோனா தொற்று நபர் இவர்தான்.

காசர்கோட்டில் பாதிப்பு
இதனையடுத்து இந்த மாணவருடன் தொடர்புடைய 150க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை; 160க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்
ஆனால் 120க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 40 பேர் அளவில்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். காசர்கோடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெருமளவில் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இதனால் கொரோனா தாக்கம் தவிர்க்க முடியாததாக இருந்தது.

தொலை நகரம்
காசர்கோடு நகரைப் பொறுத்தவரை பிற நகரில் இருந்து தொலைவில் உள்ளவை. இதனால் இங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் எளிதில் சாத்தியமானது. அதேநேரத்தில் இன்னொரு சிக்கலும் இருந்தது. தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வந்தடைவதற்கு பல்வேறு பொது போக்குவரத்துகளையும் பயன்படுத்துகிற சூழல் இருந்தது.

தொடர் நடவடிக்கைகள்
இவ்வளவு இடர்பாடுகள் இருந்த போதும் காசர்கோட்டில் அரசு நிர்வாகம் முழு வீச்சில் இறங்கியது. இடைவிடாத பரிசோதனை, கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிறப்பு அதிகாரிகளை கொண்டு ஒருங்கிணைத்தல் என முழுவீச்சில் காசர்கோட்டில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 144 தடை உத்தரவும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

இந்தியாவுக்கே வழிகாட்டி
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வீடு தேடி சென்றன. கொரோனா தொடர் சங்கிலியை அறுக்கும் வகையில் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டது. டிரோன்கள் மூலம் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படி ஒரு அங்குலம் கூட சோடை போகாமல் களப்பணியாற்றியதால் இப்போது காசர்கோடு இந்தியாவுக்கே வழிகாட்டியாகவே திகழ்கிறது.












Click it and Unblock the Notifications