சட்டத்துறையின் இரண்டாவது உயர் பதவி.. சொலிசிட்டர் ஜெனரலாக துஷ்கர் மேத்தா நியமனம்!
டெல்லி: மூத்த வழக்கறிஞர் துஷ்கர் மேத்தா இந்தியாவின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து வருகிறார்.
2014ஆம் ஆண்டு மத்தியில், துவங்கி, மேத்தா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து வருகிறார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
பல்வேறு மிக முக்கிய வழக்குகளில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் முன்வைத்து வந்தார். தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 66ஏ உள்ளிட்ட முக்கிய வழக்குகள் இவற்றில் அடங்கும்.

காலியாக இருந்தது
சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்து வந்த ரஞ்சித்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்த பதவி இதுவரை காலியாகவே இருந்து வந்தது.

அமைச்சரவை குழு
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையின், நியமனங்களுக்கான கமிட்டி இப்பதவிக்கு மேத்தாவை பரிந்துரை செய்திருந்தது. 2020 ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த பதவியை மேத்தா வகிக்க முடியும் என்பது அமைச்சரவை கமிட்டியின் பரிந்துரை.

பரிந்துரை ஏற்பு
அமைச்சரவை பரிந்துரையை ஏற்று துஷ்கர் மேத்தாவை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு. சட்ட அதிகாரிகள் மட்டத்தில், நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் அட்வகேட் ஜெனரல்
துஷ்கர் மேத்தா, முன்பு குஜராத் அரசின் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவர். இதன் மூலம், அம்மாநில அரசு சார்ந்த பல்வேறு வழக்குகளில் ஆஜராகி அனுபவம் கொண்டவர். இதன்பிறகுதான் அவர் நாட்டின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications