கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த தீ.. 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர்!
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள துணி கிடங்கில், ஞாயிற்றுக்கிழமை (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. குடோனில் துணிகள் இருந்ததால், உடனடியாக தீ பிடித்து மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.

துணி குடோனில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து நிலையக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், கீழே தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள், உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது.
இந்த தீ விபத்து மீட்பு பணிகளின் போது கேரள அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோழிக்கோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது." என்றார்.
கோழிக்கோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி கே.எம் அஷ்ரப் அலி கூறுகையில், "தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து தீயணைப்பு நிலையங்களும் விரைந்து செயல்பட்டன. இரவு 10 மணியளவில், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம், இப்போது அது முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications