அல்சூர் ஏரியில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்: பொறுப்பில்லா பெங்களூர் மாநகராட்சி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள அல்சூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் தான் மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெங்களூர் மாநகராட்சியோ கோடை காலத்தின் மீது பழியை போட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள அல்சூர் ஏரியில் ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏரியில் கழிவு நீர் கலப்பதால் அது மாசு அடைந்துள்ளது என்றும், அதனால் தான் மீன்கள் இறந்துவிட்டதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த ஏரி இப்படி மாசு அடைந்துள்ளதே என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் பெங்களூர் மாநகராட்சியோ இது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் என்று பொறுப்பில்லாமல் தெரிவித்துள்ளது.
கோடை காலம் வந்தால் ஏரியில் மீன்கள் செத்து தான் மிதக்கும் என்று பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 123 ஏக்கரில் அமைந்துள்ள ஏரியில் கழிவு நீர் கலப்பதும் அதை சுத்தம் செய்வதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் சுத்தம் செய்து சில நாட்கள் தான் ஏரி ஒழுங்காக உள்ளது.
ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்கின்றன. முன்னதாக அல்சூர் ஏரியில் ஆகாயத் தாமரை படர்ந்து நீரே தெரியாத அளவுக்கு இருந்தது. அதன் பிறகு ஏரி சுத்தம் செய்யப்பட்டது.
ஒரு காலத்தில் பெங்களூரில் 262 ஏரிகள் இருந்தன. ஆனால் தற்போது வெறும் 70 ஏரிகள் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications