இந்திய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் மாற்றம் வந்துள்ளது... அருண்ஜேட்லி தொடக்கஉரை!
இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக பாஜக அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளால் மாற்றம் வந்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக பாஜக அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளால் மாற்றம் வந்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பட்ஜெட் உரையை தொடங்கி வைத்து பேசிய அவர் பாஜக அளித்த வாக்குறுதிகளையும், செய்யப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.
பட்ஜெட் உரையை தொடங்கி வைத்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி பேசியதாவது : ஏழ்மையை ஒழித்து இந்தியாவின் வளர்ச்சியை தலைநிமிரச் செய்வோம் என்று ஆட்சிப்பொறுப்பேற்ற போது உறுதியளித்தோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்க தேவையானவற்றை செய்துள்ளது. இதன் விளைவாக இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் மாற்றம் வந்துள்ளது.
பொருளாதார சீர்திருத்தத்தில் கடந்தசில ஆண்டுகளாக எடுத்து வந்த முயற்சிகள் கைகொடுத்துள்ளன. நிர்வாக சீர்திருத்தத்தால் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. எளிமையான பல அறிவிப்புகளால் தொழில்முனைவோருக்கான வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
நேர்மையான, வெளிப்படையான அரசு என வாக்குறுதி அளித்தோம். கொள்கை முடக்கத்தால் கடந்த ஆண்டு சிக்கி தவித்தோம். கூடுதல் மூலதனத்தால் வங்கிகளில் கடன் வழங்கும் திறன் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதால் ஏழைகளுக்கான பலன்கள் அதிகரித்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டர் முறையிலான பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்றும் ஜேட்லி தெரிவித்தார்.