100 நாட்கள் தாலிபான் ஆட்சி.. உச்சத்தில் பஞ்சம், தலைவிரித்தாடும் உணவு பற்றாக்குறை.. ஆப்கன் நிலை என்ன
காபூல்: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அங்கு மிக மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ஆப்கனில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அங்கு பல்வேறு இடங்களிலும் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சபாஷ் ஷ்ரேயாஸ்.. சீறி அடங்கிய சுப்மன் கில்.. மிரட்டிய கைல் ஜேமிசன்.. சொதப்பிய ரஹானே!
கடும் உணவுப் பஞ்சம்
சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கனில் நீட்டித்த போர் அமெரிக்கப் படைகள் வெளியது மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறியுள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் அங்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பல பகுதிகளில் போதுமான உணவு கூட கிடைக்காமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டினி
ஆப்கன் நாட்டில் நிலவும் நிலை குறித்து 2 குழந்தைகளுக்குத் தாயான 35 வயதான சர்குனா கூறுகையில், "நானும் என் கணவரும் பட்டினி கிடக்கலாம், ஆனால் எங்கள் குழந்தைகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம், அவர்கள் பசியால் அழுகிறார்கள். அதைப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. கடந்த சில மாதங்களால் பல நாட்கள் நாங்கள் இரவு உணவைச் சாப்பிடாமல் அப்படியே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காலை நேரங்களிலும் வெறும் டீ தான் எங்கள் உணவு.
மிக மோசமான நிலை
சில சமயம் ரொட்டி மற்றும் சில நேரங்களில் அரிசி கிடைக்கும். ஆனால் இறைச்சி மற்றும் பழங்களைப் பார்த்தே நாங்கள் பல காலம் ஆகிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவு உணவே எங்களுக்குக் கிடைக்கிறது. இப்போது உணவைச் சமைக்கக் கூட வழியில்லை. இங்கு இப்போது நிலைமை சரியில்லை. சில நாட்களுக்கு முன், எங்களுக்கு ஒரு மூட்டை மாவு கிடைத்தது, இங்கு எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. இதனால் எண்ணெய்யைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாவை அப்படியே பச்சையாக உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு
இவர் ஒருவருக்கு மட்டுமில்லை ஆப்கனில் பல்வேறு இடங்களிலும் இதே நிலை தான். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மட்டும் நடுத்தர வர்க்கத்தினரால் தேவையான உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியவில்லை. பல குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐநா எச்சரிக்கை
முன்னதாக, ஆப்கனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் ஆப்கனை மீட்க அவசரக்கால நடவடிக்கை தேவை என்றும் அப்படி எடுக்காவிட்டால் பட்டியால் பல லட்சம் குழந்தைகள் உயிரிழக்கலாம் என ஐநா சபை எச்சரித்துள்ளது. சுமார் 3.9 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஆப்கனில் சரிபாதிக்கும் மேல், அதாவது 2.28 கோடி பேர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி தெரிவித்தார். இது கடந்த 2 மாதங்களுக்கு முன் 1.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றும் முன்னரே, பருவநிலை மாற்றம் மற்றும் உணவு பற்றாக்குறையால் ஆப்கன் சிக்கலை எதிர்கொண்டு வந்தது. இருப்பினும், தாலிபான்கள் ஆட்சியில் நிலைமை பல மடங்கு மோசமாகவிட்டது. தாலிபான்களால் அரசு ஊழியர்களுக்குக் கூட ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆப்கன் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க தங்கள் சொத்துகளை விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Recommended Video
சிரியா
ஆப்கனில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால், உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவில் ஏற்பட்ட நிலை ஆப்கனில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.