நேருவின் சித்தாந்தத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க முயற்சி: பாஜக மீது சோனியா குற்றச்சாட்டு!
டெல்லி: நேருவின் சித்தாந்தத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க சிலர் முயற்சிப்பதாக பாஜக மீது காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜஹவர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் விழாவில் சோனியா காந்தி பேசியதாவது:

நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஜவஹர்லால் நேருவின் பங்கு அளப்பரியது. நேரு இல்லாமல் போயிருந்தால் நாம் சந்திராயனையும் மங்கள்யானையும் அனுப்பி இருக்க முடியாது.
நேருவின் தொலைநோக்கு ஜனநாயக சிந்தனைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடித்தளம். இன்று நேருவை சிலர் இலக்கு வைப்பது என்பது ஒரு தனிமனிதர் மீதான தாக்குதல் அல்ல...நேருவின் சித்தாந்தம் மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சி 129 ஆண்டுகால கட்சி. எத்தனையோ சோதனைகள் வந்த போதும் அவற்றை தாங்கிக் கொண்டு இந்த கட்சி தொடர்ந்து இயங்குகிறது எனில் அது நம் முன்னோர்கள் பின்பற்றிய பாதையால்தான்.
நேருவின் சித்தாந்தத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நேருவின் சித்தாந்தத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க துடிக்கும் சக்திகளை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்.
இப்போது நேரு நம்முடன் இருந்திருந்தால் மக்களிடம் செல்லுங்கள்,, மக்களுடன் ஐக்கியமாகுங்கள், கட்சியை பலப்படுத்துங்கள் என்றுதான் உத்தரவிட்டிருப்பார்.
இந்த நாட்டில் பிளவை ஏற்படுத்தும் சக்திகள் எந்த வடிவத்திலும் வண்ணத்திலும் வந்தாலும் நாம் எதிர்த்துப் போராடுவோம்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications