மேற்கு வங்கத்தில் எழுகிறது உலகிலேயே மிகப்பெரிய கோவில்.. இஸ்கானுக்கு 200 கோடி காணிக்கை தந்த ஃபோர்டு!
கொல்கத்தா: பாரம்பரியம் மற்றும் கலாச்சார கூறுகளை போற்றி பாதுகாக்கும் நாடுகளில் இந்தியா எப்போதும் முதன்மையானதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் மாயாபூரில் கட்டப்பட்டு வரும் இந்து மதத்தின் கோயில் ஒன்று உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாக சின்னமாக மாற இருக்கிறது.
உலகம் முழுவதும் இதுபோன்ற மத நினைவு சின்னங்கள் இருக்கதான் செய்கிறது. ஆனால் இவையாவற்றையும் விட இந்த கோயில் அளவில் பெரியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கோயில் நிலத்தை மீட்க கோரி வழக்கு.. குட்டு வைத்த சென்னை ஐகோர்ட் அபராதமும் விதிப்பு! ஏன் தெரியுமா
பிரமாண்ட கோயில்
மேற்குவங்க மாநிலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் கோயில்தான் இந்த பெருமையை பெற உள்ளது. மேற்கு வங்கத்தின் மாயாபூரில் கட்டப்பட்டு வரும் இந்து மதத்தின் 'வேத கோளரங்கம் கோயில்' உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்கான்
சர்வதேச கிருஷ்ண விழிப்புணர்வு அமைப்பான இஸ்கான் (ISKCON) இந்த கோவிலை எழுப்பி வருகிறது. இந்த கோவில் கட்டுமானப்பணிகளில் முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு தற்போது கோயில் தளம் முடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டால், ஒரே நேரத்தில் சுமார் 10,000 பேர் ஒன்றாக நின்று தரிசனம் செய்யலாம். இது ஒரு கால்பந்து மைதானத்தைவிட பெரியது என்று இஸ்கான் (ISKCON) அமைப்பின் கொல்கத்தா துணைத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ண பக்தர்
இதில் சுவாரசியம் என்னவெனில், இந்த கோயிலை எழுப்பும் திட்டத்தின் தலைவராக இருப்பவர் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான 'ஃபோர்ட்' நிறுவனத்தின் முக்கிய தலைவர்களுல் ஒருவரும் அந்நிறுவனத்தின் வாரிசுகளில் ஒருவருமான ஆல்ஃபிரட் ஃபோர்டுதான். அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து மேற்குவங்கத்தின் மாயாபூர் வரையிலான ஆல்ஃபிரட் ஃபோர்டு-இன் பயணம் 1975லிருந்து தொடங்கிவிட்டது. இஸ்கான் உறுப்பினராகவும், நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதாவின் சீடராகவும் இருப்பவர்தான் ஆல்ஃபிரட் ஃபோர்டு. இதன் தொடர்ச்சியாக தனது பெயரை 'அம்பரீஷ் தாஸ்' என்றும் மாற்றினார். மேலும், மாயாபூரை இஸ்கானின் உலகளாவிய தலைமையகமாக மாற்றும் பிரபுபாதாவின் திட்டத்தில் ஆல்ஃபிரட் ஃபோர்டு முழுமையாக முதலீடு செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் உள்கட்டமைப்பிற்காக சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளார். இந்த கோயிலுக்கான திட்டம் சுமார் ஒன்பது ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. வெறுமென நிதியளித்ததுடன் நின்றுவிடாமல் உலகம் முழுவதும் சுற்றி மேலதிக நிதியையும் திரட்டினார்.
சிறப்பம்ச வடிவமைப்பு
அப்படி என்ன இந்த கோயிலில் சிறப்பம்சம் என்று கேட்கிறீர்களா? இதில், வேத கலை, அறிவியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் காட்சிப்படுத்தப்படும். மட்டுமல்லாது இந்த கோயில், இந்துக்களின் புனித நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள கிரக அமைப்பின்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. அதாவது பூமி கிரகம் போன்று கீழ்த்தளம் அமைக்கப்படும். கடவுள் மேலே இருப்பார். எனவே எஸ்கலேட்டர்களில் பயணித்து சென்று தரிசிக்க வேண்டும்.
700 ஏக்கர் நிலம்
700 ஏக்கர் பரப்பளவில் இஸ்கான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கருவறை மட்டும் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும். இதை முழுமையாக கட்டி முடிக்க சுமார் ரூ.400 கோடி செலவாகும். இது குறித்து ராதாராமன் கூறுகையில், "முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்காளத்தின் நில உச்சவரம்புச் சட்டத்தைத் தள்ளுபடி செய்து, இவ்வளவு பரந்த நிலப்பரப்பை வாங்குவதற்கு எங்களுக்கு நிறைய உதவியுள்ளார். கோயில் தயாரானதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
2024ல் கட்டி முடிக்கப்படும்
நவீன அறிவியலுக்கும் இந்திய அறிவு அமைப்புக்கும் இடையேயான உரையாடலை ஊக்குவிக்கும் வகையில், இந்த கோயிலில் உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆன்மீக நிறுவனங்களும் கட்டமைக்கும் என்று சொல்லப்படுகிறது. கோயிலை கட்டி முடிக்க தற்போதுவரை சுமார் 60 சதவிகித நிதி திரட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை வேகமாக திரட்டி வரும் 2024ம் ஆண்டுக்குள் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என இஸ்கான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கம்போடியாவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவிலை விட இஸ்கான் கோவில் பெரிதாக உருவெடுக்கும். இது உலகின் மிகப்பெரிய கோவில் என்ற பெருமையை பறைசாற்றும்.