வெளிநாட்டில் பரிசு பொருட்கள் பெற்றதலில் மோடியை பின்னுக்கு தள்ளினார் சுஷ்மா சுவராஜ் !
டெல்லி: வெளிநாட்டு பயணங்களின் போது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களில் பிரதமர் மோடியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பிரதமர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நட்பு ரீதியாக அவர்களுக்கு சிலர் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இணை அமைச்சர் நிர்மலா சீதாரமான், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்ளிட்டோர் வெளிநாடுகளில் பெற்ற பரிசுப் பொருட்களின் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களிலும் பெற்ற பரிசுப் பொருட்களும் இதில் அடங்கும். இந்த பட்டியலின்படி, சுஷ்மா சுவராஜ் மொத்தம் 2.33 லட்சம் மதிப்புள்ள 29 பரிசுப் பொருட்களுடன் முதல் இடத்தையும், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் 25 பரிசுப் பொருட்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மா பெற்றுள்ள பரிசுப் பொருட்களில் அதிக மதிப்புள்ளதாக ரூ.40,000 மதிப்புள்ள வெள்ளி பயன்பாட்டு பெட்டியும் (யுட்டிலிட்டி பாக்ஸ்), பிரதமர் மோடி பெற்றுள்ள பரிசுப் பொருட்களில் அதிக மதிப்புள்ளதாக ரூ.18,000 மதிப்புள்ள கடிகாரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் 17 பரிசுப் பொருட்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு காகித பெட்டி (ட்டிஷ்யு பேப்பர்) பரிசுப் பொருளாக வந்துள்ளது. 4 வது இடத்தில் 17 பரிசு பொருட்களுடன் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளதாகவும் அந்த பட்டியல் தெரிவிக்கிறது.
குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரிக்கு பெண்கள் உபயோகிக்கும் பர்ஸ் பரிசுப் பொருளாக வந்துள்ளது எனவும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைகடிகாரம் அதிக மதிப்புள்ள பரிசுப் பொருளாகவும், அதனை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பிஎஸ் ராகவன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் நிர்மலா சீதாராமன் பெற்ற ரூ.1,000 மதிப்புள்ள காகித பெட்டி (ட்டிஷ்யு பேப்பர்), குறைவான மதிப்புள்ள பரிசுப் பொருளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகளுக்கு ஐபோன் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பெற்ற பரிசுப் பொருட்கள் அனைத்தையும் அரசு கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டதாக சுஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications