என்னை மன்னித்து விடுங்கள்... நான் செய்தது மிகப்பெரிய தவறு... தொண்டர்களிடம் கெஞ்சிய சித்து
அமீர்தசரஸ்: ‛‛என்னை மன்னித்து விடுங்கள்... நான் செய்தது மிகப்பெரிய தவறு'' என தேர்தலுக்கு ஒருநாள் உள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து தொண்டர்களிடம் கெஞ்சினார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி(எஸ்) கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இன்று மாலை 6 மணிக்கு பஞ்சாப்பில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

சொந்த தொகுதி பிரசாரம்
இந்நிலையில் பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து அமீர்தரசரஸ் கிழக்கு தொகுதிக்குட்பட்ட கோல்டன் அவென்யூ பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் தொண்டர்களிடம் மன்னிப்பு கோரியதோடு, தான் செய்தது தவறு என கூறினார். இந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மன்னிப்பு
உங்களிடம்(தொண்டர்கள்) நேரடியாக தொடர்பு வைத்து கொள்ளாதது தான் எனது மிகப்பெரிய தவறு. நள்ளிரவு 1.30 மணிக்கு பார்க்க வந்த தொண்டர்களை நான் பார்க்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். அமீர்தசரஸ் மக்களிடம் ஒன்றை மட்டும் கூறுகிறேன். இனி அமிர்தசரஸை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வருங்காலத்தில் தொண்டர்களுடன் ஒருமணிநேரம் பேச வசதியாக தொலைபேசி எண் கொடுப்பேன். இது உறுதியானது. நான் எனது தவறை ஏற்று கொள்கிறேன். கட்சி முடிவுகளை எடுக்கும் இடத்தில் அதாவது மாநில தலைவராக நான் இருக்கிறேன். அடுத்த 5 ஆண்டில் 100 ஆண்டுகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பேன்'' எனக்கூறினார்.

எதிர்க்கும் மூவர்
இந்த தொகுதியில் சித்துவை எதிர்த்து பாஜக சார்பில் ஜக்மோகன் சிங் ராஜூ, எஸ்ஏடி சார்பில் பிக்ராம் சிங் மஜிதியா, ஆம் ஆத்மி சார்பில் ஜீவன்ஜோத் கவுர் போட்டியிடுகின்றனர்.

கதவடைப்பு
இதற்கிடையே அமீர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சித்து தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்துக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் வீட்டு கதவை பூட்டியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் தான் நவ்ஜோத் சித்து தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications