இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கமாண்டோ படை, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் காஷ்மீரின் நவுகம் செக்டார் பகுதியின் இரண்டு இடங்கள் மற்றும் வடக்கு காஷ்மீரின் ராம்பூர் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை இன்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்
தொடர்ந்து, தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் லாங்கேட்டில உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.