“இலவச மின்சாரத்திற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் சம்பந்தமில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்கள்
தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு பெற்றுள்ள 2.33 கோடி நுகர்வோரில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மின் பயனாளர்கள் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று(நவம்பர் 28) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10:30 முதல் மாலை 5:15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் தவிர ஞாயிற்றுக் கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் என்று இதுகுறித்து மாறுபட்ட, உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பகிரப்படுகின்றன என்று கூறிய அமைச்சர் மின் இணைப்பு குறித்த சில தகவல்களைத் தெரிவித்தார். அவர் தெரிவித்த முக்கியத் தகவல்கள் இங்கே.
- அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டுகளுக்கு உள்ளாக மின்சாரம் பயன்படுத்தப்படுவது, ஏற்கெனவே வழங்குகின்ற 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பு போன்று நடைமுறையில் இருக்கக்கூடிய இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் என்று ஏற்கெனவே நடைமுறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றனவோ அவை அதே நடைமுறையில் பின்பற்றப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இவையனைத்தும் ரத்தாகிவிடும் என்ற தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
- எவ்வளவு பேர் சொந்த வீட்டில் குடியிருக்கின்றனர், எவ்வளவு பேர் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கின்றன போன்ற எந்தவிதமான தரவுகளும் மின்வாரியத்திடம் இல்லை.
- ஏறத்தாழ 1.15 லட்சம் மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்வாரியத்திடம் இருந்தன. மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டும், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மின்வாரியத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- ஒருவர் ஐந்து மின் இணைப்புகளை வைத்திருந்தாலும் சரி நூறு இணைப்பு வைத்திருந்தாலும் சரி, ஓர் இணைப்புக்கு தலா 100 யூனிட் என இலவச மின்சாரம் தொடரும்.
- ஒரே ஆதார் எண்ணில் 10 மின் சேவைகள் இருந்தாலும் இணைத்துக் கொள்ளலாம். 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
- ஒருவேளை குடும்பத்தில் உயிரிழந்தவரின் பெயரில் மின் இணைப்பு எண் இருந்தால், டிசம்பர் 31 வரை நடக்கும் இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களைக் கொடுத்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகளும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அது நடைமுறைபடுத்தப்படும்.
- இலவச மிசாரம் பெரும் விவசாயிகளும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
- மின் இணைப்பு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.
- வீடுகளுக்கான மின் இணைப்பு பெற்ற பயனாளர்கள் மொத்தம் 2.33 கோடி பேர். அதில் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்தவர்கள் மொத்தம் 15 லட்சம் பேர்.
- இந்தத் தரவுகள் முழுவதும் கிடைத்த பிறகே, குடும்ப மின்சார இணைப்பைப் பெற்றுக்கொண்டு வணிகரீதியாகப் பயன்படுத்துவது, யாரெல்லாம் அதை வேறு வகைகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதைக் கண்டுபிடித்து சீரமைத்தால் தான், மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குவதைத் தவிர்க்க முடியும்.
- மின்சார வாரியத்தை மேம்படுத்தவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
- தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1.59 கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 11,000 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது. மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு மேம்படுத்தவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்