டெல்லி சட்டசபையை கலைக்க ஆளுநர் பரிந்துரை: பிப்ரவரியில் மறுதேர்தல்?
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக உள்ளிட்ட எந்த கட்சியும் விரும்பாததால், அங்கு சட்டசபையைக் கலைக்க பரிந்துரை செய்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பி உள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. எனவே, இரண்டாம் இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.
49 நாட்கள் ஆட்சி புரிந்த ஆம் ஆத்மி, திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.
தவறான முடிவு...
டெல்லியில் ஆட்சியைக் கலைத்தது தவறான முடிவு என ஆம் ஆத்மி காலம் தாழ்த்தி உணர்ந்தது. இதற்கிடையே லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது பாஜக.
வழக்கு...
எனவே, டெல்லி சட்டசபையைக் கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசித்து முடிவு எடுப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்திருந்தார்.
மறுதேர்தல்...
அதன்படி, பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சி அமைக்க போதிய இடங்கள் இல்லாததால், டெல்லியில் மறுதேர்தல் நடத்த விருப்பம் தெரிவித்தது பாஜக.
பாஜக திட்டம்...
லோக்சபா தேர்தல் மற்றும் ஹரியானா, மகாராஷ்டிரா மாநில தேர்தல்களில் கிடைத்த அமோக வெற்றியைத் தொடர்ந்து பாஜக இந்த முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
காங். திட்டம்...
அதேபோல், காங்கிரஸ் கட்சியும் மறுதேர்தல் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தரப்பில் நஜீப் ஜங்கை சந்தித்த ஹாரூன் யூசூப் கூறுகையில், 'கெஜ்ரிவால் ராஜினாமா செய்த மறுநாளில் இருந்தே மறுதேர்தல் நடத்த நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதையே துணை நிலை ஆளுநரிடமும் வலியுறுத்தியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை....
இதைப்போல ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவுடன் இணைந்து துணைநிலை கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தில் புதிதாக தேர்தல் நடத்துமாறு அவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
குடியரசுத்தலைவருக்கு அறிக்கை...
இதனையடுத்து அனைத்து கட்சிகளும் மறுதேர்தலுக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக குடியரசுத் தலைவருக்கு இன்று நஜீப் ஜங் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், ‘‘டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. எனவே சட்டசபையை கலைக்கலாம்'' என்று பரிந்துரை செய்துள்ளார்.
தொங்கு சட்டசபை அமையும் என்பதால்...
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், ‘தொங்கு சட்டசபை அமையும் என்பதால் ஆட்சி அமைக்க இயலாது என்று பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியாகும் தொகுதிகள்...
கவர்னர் நஜீப் ஜங்கின் இந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லி சட்டசபை கலைக்கப்படுவதாக அறிவிக்க உள்ளார். இதன்மூலம் டெல்லியில் 70 இடங்களும் காலியானதாக மாறும்.
அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள்...
இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை காலியானதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்படும். அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கும்.
ஆம் ஆத்மியின் கோரிக்கை...
சட்டசபை கலைக்கப்படுவதால், டெல்லி மாநிலத்தில் மீண்டும் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலுடன் டெல்லி சட்ட சபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மியும் கோரிக்கை விடுத்துள்ளன.
பிப்ரவரியில் தேர்தல்...
ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்குமா எனத் தெரியவில்லை. எனவே, தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப் படும் எனத் தெரிகிறது. ஜனவரி மாதம் டெல்லி சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவித்து, பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்....
இதற்கிடையே இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநரின் பரிந்துரையை ஏற்று டெல்லி சட்டசபையைக் கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.