நண்பரோடு சேர்ந்து மைனர் மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
டெல்லி: நண்பரோடு சேர்ந்து மைனர் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் டெல்லி போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது கணவர், அவரது நண்பருடன் சேர்ந்து தனது 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், அவரது நண்பருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த தீர்ப்பை அளித்த நீதிபதி கெளதம் மனான் கூறுகையில், "தந்தை -மகள் என்ற புனிதமான உறவின் நம்பிக்கையை தகர்த்து விட்டார் இந்த தந்தை. இந்த விஷயத்தில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
அந்த சிறுமியால் இந்த சம்பவத்தை தனது வாழ்நாளில் மறக்க முடியாது. தான் மட்டும் தவறு செய்ததோடு நில்லாமல், தனது நண்பரையும், மகளை பலாத்காரம் செய்ய உதவி செய்த செயல் மிகவும் இழிவானது, மன்னிக்க முடியாதது.
பெற்றோர்கள்தான் குழந்தைகளின் பாதுகாப்பு. எங்கு பாதுகாப்பு இல்லாவிட்டாலும் பெற்றோரிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பிள்ளைகள் உள்ளனர். அந்த அடிப்படையை குற்றவாளி தகர்த்து விட்டார்.
எந்த நாகரீக சமுதாயத்திலும் இதுபோன்ற மிருகத்தனமான செயலுக்கு அனுமதி கிடையாது. இது சமுதாயத்தை சீர்கெடுக்கும் செயலாகும். வளர்ச்சி அடையாத சமுதாயத்திற்கே இது வழி வகுக்கும்" என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications