இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை தாருங்கள்... ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுவேன்... மோடி பேச்சு
ஹரியானா: இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை கொடுத்தால், ஊழல்வாதிகளை சிறைக்கம்பிகளை எண்ணவைப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஹரியானா மாநிலம் ரோதக்கில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த, 2014ல், மக்கள் ஆதரவுடன் மத்தியில் அமைந்த, பா.ஜ.க அரசு, 5 ஆண்டுகளில், உலகளவில், இந்தியாவின் நன்மதிப்பை பெருமளவு உயர்த்தியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
சீக்கியர் படுகொலை விவகார சர்ச்சை.. கோதாவில் குதித்த எச். ராஜா!
ஊழலை தடுத்தேன்
காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும், ஊழலையும், தடுத்தேன். ஆனால், அவர்கள் அன்பு என்ற முகமூடி அணிந்து, என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். ஹிட்லர், முசோலினி, தாவூத் இப்ராஹிம் என்றெல்லாம் என்னை வசை பாடினர். அவர்களின் அன்பு அகராதியில் உள்ள சொற்களை, இங்கு சொல்கிறேன் என்றார்.
சிறையில் தள்ளுவேன்
மேலும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்த, சோனியா மருமகன், ராபர்ட் வத்ரா, நடுக்கத்தில் உள்ளார். அவரை சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டேன். உங்கள் ஆசியுடன், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள், அவரை சிறையில் தள்ளுவேன்.
5 ஆண்டுகள் அதிகாரம்
ஏற்கனவே நாட்டை சூறையாடியவர்கள் ஜாமீனில் இருந்து விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்க அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். நீங்கள் எனக்கு வாக்களித்து இன்னும் 5 ஆண்டுகள் அதிகாரம் கொடுத்தால், அவர்களை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளும் நிலையை உருவாக்குவேன் என்று பேசினார்.
கனவு தகர்ந்தது
நடந்து முடிந்துள்ள ஐந்து கட்ட தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மற்றும் 'மெகா' கூட்டணி கட்சிகளின் ஆரவார கூச்சல் அடங்கி விட்டது; போட்டியில் இருந்தும் விலகி விட்டன. மத்தியில், கூட்டணி சேர்ந்தோ அல்லது தனியாகவோ அரசு அமைக்கலாம் என்ற, காங்கிரஸ் கட்சியின் கனவு தகர்ந்து விட்டது.