கோவாவில் புதிய திருப்பம்! செங்குத்து பிளவில் இருந்து தப்பியது காங்... 10 எம்.எல்.ஏ.க்கள் ரிட்டர்ன்!
பனாஜி: கோவா அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு தற்போதைக்கு ஓய்ந்துள்ளது. பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் அக்கட்சித் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 11 எம்.எல்.ஏக்களில் 6 பேர் திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனர். 11 எம்.எல்.ஏக்களில் 7 பேர் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்தன.

இதனையடுத்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பனாஜியில் முகாமிட்டு காணாமல் போன எம்.எல்.ஏக்களை மீட்டுக் கொண்டுவருவதில் முனைப்பாக செயல்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மைக்கேல் லோபோ தலைமையில்தான் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால் மைக்கேல் லோபா, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ இருவரையும் தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் சபாநாயகரிடம் மனு கொடுத்தது.
இந்த நிலையில் பனாஜியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய திருப்பமாக மொத்தம் உள்ள காங்கிரஸின் 11 எம்.எல்.ஏக்களில் 10 பேர் பங்கேற்றனர். அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் லோபோவும் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கோவா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமித் பட்கார் ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
கோவா குழப்பம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகுல் வாஸ்னிக், கோவா காங்கிரஸில் பிளவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதை நிரூபித்துவிட்டனர். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவது; சட்டசபையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது குறித்து நாங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். அப்போது, 2 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனுவை திரும்பப் பெறுவீர்களா? எனவும் முகுல் வாஸ்னிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முகுல் வாஸ்னிக், அனைத்து கேள்விகளையும் இப்போதே கேட்கவேண்டாம்.. கொஞ்சம் பொறுத்திருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications