கோத்ரா அன்று எரிந்தது...இன்று கொரோனா சிறப்பு வார்டானது மசூதி...மனிதநேயம் தழைத்தது!!
வதோதரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் இருக்கும் மசூதி தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாறியுள்ளது. கோத்ரா என்ற பெயர் உலக அளவில் ஒரு காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. அன்று நடந்த சம்பவங்கள் இன்றும் நெஞ்சில் இருந்து நீங்கவில்லை. இதற்கு எல்லாம் ஆறுதல் கூறும் செய்தியாக மனிதநேயம் அங்கு தழைத்துள்ளது.
கொரோனா நோய் மதம் பார்த்து, ஜாதி பார்த்து, ஏழை, பணக்காரன் பார்த்து வருவதில்லை. அதற்கு அனைவரும் ஒன்றுதான். இந்த மனித சமுதாயத்தை கொரோனா சிந்திக்க வைத்து இருக்கிறது.
கேட்டு கேட்டு செய்யும் உதவி... சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டுக்கள்
கொரோனா சிறப்பு வார்டான மசூதி
இந்த வகையில் கோத்ராவில் ஷேக் மஜாவர் ரோட்டில் இருக்கும் ஆதம் மசூதியின் கீழ் தளம் கொரோனா நோயாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தளம் முன்பு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தளத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றுவதற்கான முடிவை மசூதியின் மேலாண்மை டிரஸ்ட் எடுத்துள்ளது. இங்கு தற்போது அதிகளவில் கொரோனா நோயாளிகள் வருகின்றனர். இதுவரை ஒன்பது பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை ஆரம்பம்
இதுகுறித்து டாக்டர் அன்வர் கச்பா கூறுகையில், ''கோத்ரா முஸ்லிம் சமாஜ், முஸ்லிம் மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து மசூதியின் கீழ் தளத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றுவது என்ற முடிவை எடுத்தோம். மாவட்டக் கலெக்டரிடம் 50 படுக்கைகள் அமைக்க முதலில் அனுமதி கேட்டோம். அவரும் 32 படுக்கைகளுக்கு அனுமதி கொடுத்தார். கடந்த ஜூலை 11ஆம் தேதியில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கிறோம்.
தனிமைப்படுத்த 16 படுக்கைகள்
இந்த 32 படுக்கைகளில் 16 படுக்கைகள் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தவும், 16 படுக்கைகள் கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் சிக்கன்குனியா பரவியபோதும், சிறப்பு வார்டு அமைக்க முயற்சித்தோம். அப்போது முடியவில்லை. அருகில் இருக்கும் அகமதாபாத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் இருந்து பர்னிச்சர் கொண்டு வந்து இருக்கிறோம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இது மிகவும் உதவுகிறது. கோத்ரா மருத்துவமனையும் எங்களுக்கு உதவி வருகிறது. இதுவரை சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்து நெகடிவ் என்று தெரிந்த பின்னர் 11 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் '' என்றார்.
குஜராத்தில் இதுவரைக்கும் 47,390 பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது. 34,035 பேர் மீண்டு வந்துள்ளனர். 2,122 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோத்ராவில் ரயில் எரிப்பு
2002ல் கோத்ராவில் நடந்த மத ரீதியிலான வன்முறையை யாரும் மறந்து இருக்க முடியாது. அந்த ஆண்டில் பிப்ரவரி 27ஆம் தேதி, அயோத்தியில் கர சேவை முடித்து வந்து கொண்டிருந்த கர சேவகர்களின் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பத்தில் 58 இந்து கரசேவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 1044 உயிரிழந்தனர். 223 பேர் காணவில்லை என்றும், 2,500 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டது. உயிரிழந்தவர்களில் 790 பேர் முஸ்லிம்கள். 254 பேர் இந்துக்கள்.
அவ்வளவு கோரமான சம்பவம் நடந்த இடத்தில் இன்று மனித நேயம் தழைத்துள்ளது. மதம், ஜாதிய வேறுபாடு இல்லாமல் மசூதிக்கு சிகிச்சை பெற மக்கள் வருகின்றனர்.