மோசடி தொழிலதிபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அவசரச் சட்டம்... கிரீன் சிக்னல் தந்த அமைச்சரவை!
பணமோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி : பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டம் 2018க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பண மோசடி செய்துவிட்டு கிரிமினல் குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டில் பதுங்கியுள்ள தொழிலதிபர்கள் நீரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை இதன் மூலம் பறிமுதல் செய்ய முடியும்.
வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கி விட்டு அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் தொழிலதிபர்கள். இதற்கு தொடக்க புள்ளி வைத்தவர் கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.
அதோடு தன் மீதான வழக்கை சந்திக்க இந்தியா வராமல் வெளிநாட்டில் இருந்தபடி மத்திய அரசுக்கு போக்கு காட்டி வருகிறார். தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் மோசடி ஆவணங்களை காட்டி கடன் வாங்கும் விஷயம் அம்பலமாகி வந்த நிலையில் இதில் லேட்டஸ்ட் மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய டைமண்ட் வியாபாரி நீரவ் மோடி.

தொழிலதிபர்களும் மோசடிகளும்
வழக்கம் போல வங்கி மோசடி செய்த நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்ஸியும் பண மோசடி விஷயம் வெளிவரும் முன்னரே வெளிநாட்டிற்கு தப்பித்துவிட்டனர். பணமோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பித்துவிடும் தொழிலதிபர்கள் விசாரணைக்கு இந்தியா வராமல் ஜகா வாங்கி வருகின்றனர். அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான கடுமையான சட்டங்களும் இல்லை.

சொத்துகளை பறிமுதல் செய்ய முடியவில்லை
பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் தொழிலதிபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. எனவே எந்தத் தடையும் இல்லாமல் பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வகை செய்யும் மசோதா கடந்த மாதம் 12-ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

ஒப்புதல் அளித்த அமைச்சரவை
ஆனால் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் அமளியால் செயல்படாமல் போகவே அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவசர சட்டம் என்ன சொல்கிறது?
இந்த அவசர சட்டத்தின் மூலம் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடும் நபர்களின் சொத்துகள் எந்த தடையுமின்றி பறிமுதல் செய்து விற்பனை செய்யப்படும். இது போன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போலி அரசு முத்திரைத்தாள் அல்லது கள்ள ரூபாய் நோட்டுகளை அளிப்பவர், செக் மோசடி, பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் மூலம் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் இந்த அவசர சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
பணமோசடி தடுப்பு சட்டம் 2002ன் படி நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர் அல்லது துணை இயக்குநர் சிறப்பு நீதிமன்றத்தை அணுகி ஒரு நபரை பொருளாதார பண மோசடியாளர் என அறிவிக்க அவசர சட்டம் வழிவகை செய்கிறது.












Click it and Unblock the Notifications